Saturday, May 9, 2015

பன்னிரெண்டு விரல்

டேப், ஐபேட், எஸ் ஃபோர், லாப்பி, டெஸ்கி என்று தலைக்கு ஒன்றாய் கையில் வைத்து முப்போதும் மும்முரமாக நோண்டிக்கொண்டிருப்பதால் இணைய உபயோகம் வாங்கிய திட்டத்திற்கு மேல் அதிசீக்கிரம் கபளீகரம் செய்யப்பட்டு படுத்துவிடுகிறது. 

வரவு எட்டணா செலவு பத்தணா மாதிரி மாசக்கடைசியில் குந்தணா..குந்தணா...வாகிவிடுகிறது. ஏழு கடல் ஏழு மலை ஏழு கூவம் தாண்டி வருவது போல லாப்பியில் அடித்து... கிராஃபிக்ஸ் ஜிகினாக்கள் இல்லாத ஜிமெயிலின் பேஸிக் வர்ஷனில் லாகின்செய்து.... ட்ராஃப்டில் சேமித்து வைத்து... குடுகுடுவென்று ஓடி... எப்போதும் தன்னை சார்ஜ் ஏற்றிக்கொண்டிருக்கும் ஐஃபோனில் ஜிமெயிலுக்குப் போய்... அங்கே ட்ராஃப்ட்டிலிருந்து எடுத்து... ஐஃபோன் 3ஜியில் இணையத்தை அடைந்து.. ஃபேஸ்புக்கில் பதிவு போட்டு..... அதீத கடமையாற்றிக்கொண்டிருக்கிறேன். 

நண்பர்களின் பதிவுகளுக்குக் கமெண்ட் போடுவதற்குள் கட்டை விரல் இரண்டும் கழண்டு விடுகிறது. இரண்டு நாட்களாக எனது பதிவுகளுக்கு கருத்துரைத்தவர்களுக்கு சம்பிரதாய நன்றி நவிலல் கூட செய்யமுடியாத பாவியாகிவிட்டேன்.

”எல்லோரும் எப்போதும் குனிந்து கொண்டே கட்டை விரல்களால் எதையோ சொரிந்து கொண்டேருக்கிறார்களே.. என்னப்பா அது?” என்று ப்ரம்மா குழுமியிருந்த தேவலோக வாசிகளிடம் கேட்டாரம்.

திரிலோக சஞ்சாரியான நாரதர் முன்னே வந்து “ப்ரபோ... அதன் பெயர் ஸ்மார்ட் ஃபோன்கள்... எப்போதும் வம்பளந்துகொண்டே இருப்பதற்கான வஸ்துக்கள்... கிரிக்கெட் உலகக்கோப்பை ரொம்ப சின்னது. உலக அண்டாவை போட்டியின் பரிசாக வைத்தால்தான் இந்தியர்கள் ஜெயிப்போம்...போன்ற அக்கப்போர்களை அடுக்குவார்கள்.. சட்டென்று பொங்குவார்கள்.. பொசுக்கென்று அடங்குவார்கள்.. எதற்கும் புர்ச்சி செய்வார்கள்...“

“அப்போ.. நீர்தான் தேவலோக ஸ்மார்ட் ஃபோனா நாரதா?” என்று நாரதரைக் கட் செய்து மொக்கை ஜோக்கடித்த ப்ரம்மாவின் சத்தியலோகத்திலிருந்து கழண்டு கொள்ள எத்தனித்த நாரதரின் அங்கவஸ்திரத்தை இழுத்துப் பிடித்து ப்ரம்மா காதில் சொன்னாராம்... “இனி.. மனித ஜென்மங்களின் டிசையனை மாற்றிவிடுவோம். மொத்தமாக பன்னிரெண்டு விரல் வைத்துவிடுவோம். கைக்கு ஒரு கட்டைவிரல் எக்ஸ்ட்ரா... மண் பயனுறட்டும்... ”

நாரதர் வம்படியாக “பத்து விரலோடு பிறந்தவர்களை என்ன செய்வது?” என்று கேட்டார்.

“எனக்கு கோயில்கள் நிறைய கட்டவில்லை. சில இடங்களில் சுட்டெரிக்கும் வெயில் புயல் மழையடிக்கும் பிரகார கோஷ்டத்தில் வைத்து கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள். ஃபேஸ்புக்கிலும் வாட்ஸாப்பிலும் இன்னபிற சோஷியல் நெட்வொர்க்குகளில்
 “ஓம் வேதாத்மகாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்
” என்ற என் காயத்ரி மந்திரத்தை 108 முறை ஷேர் செய்வதன் மூலம் இரு கட்டை விரல் எக்ஸ்ட்ராவாக முளைக்கக்கடவார்கள்” என்று ஆசீர்வதித்தாராம்.

இராத்திரிக்குள் 108 முறை ஷேர் செய்து இராவோடு ராவாக இரண்டு கட்டை விரல் உபரியாக வளரக்கடவீர்கள். ஓம் ப்ரஹ்மா!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails