Saturday, May 9, 2015

பருகாமலே ருசியேருதே.........

புண்ணிய தீர்த்த ப்ரோக்ஷணம் போல ட்ரிஸ்லிங். ச்சர...ச்சர....ன்னு டயர்கள் ரோட்டை உரசும் சப்தம். மழைக்கு காதல் கவிதைகள் எழுதிப் பழகுபவர்கள் ”சக்கரங்கள்.. சாலைக்குக் கொடுக்கும் இச்..இச்..இச்கள்” என்றும் கவி டச் கொடுப்பார்கள். ஈஸ்வர கடாக்ஷத்தில் வடபழனி சிக்னலருகே கூட வண்டிகள் தேங்கவில்லை. தலைக்கு பாரமாய் இருக்கிறது என்று ஹெல்மெட்டை பெட்ரோல் டாங்கில் கவிழ்த்து ஒரு வீரதீர பராக்கிரமசாலி S போட்டுச் சென்றார். எனக்கு உள்ளுக்குள் ஆடியது. 

புறவுலகின் இத்தகைய ஆட்டங்களிலிருந்து விடுதலையாக 91.1 சுகமாகப் பாடியது. தொன்னூற்றோரு நாட்களுக்கு ரவுண்ட் தி க்ளாக் இளையராஜா பாடல்கள் மட்டும் என்று அறிவிப்பாளர் கதறிக்கொண்டிருந்தார். ”நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்..”லில் எஸ்பிபி காதலாகக் குழைந்தார். பாந்தமாக டூயட் பாடிய ஜானகியின் குரலில் டன் டன்னாய் இளமையைக் கொட்டி மொழுகியிருந்தது. முன்னால் முப்பதில் சென்ற ஆட்டோக்காரரை முந்த எண்ணம் வரவில்லை. ”என் வாழ்விலே தீபம் ஏற்று...” என்ற எஸ்பிபியின் சரண முடிவின் போது தபதபத்த தபேலாவுக்கு சிக்னல் போட்டமாதிரி இருந்தது. பாட்டு முடியும் வரை க்ளட்ச் கியரைப் பிடிக்க மனது மறுத்தது. எப்பவோ டிவியில் இந்தப் பாடலைப் பார்த்தது நியாபகம் வந்தது. பிரபு சாரையும் ராதா மேடத்தையும் வெள்ளிப்பனிக் கட்டிகளுக்கிடையில் லாங் ஷாட்டில் ஓடவிட்டே நிலவொன்று கண்டேனை எடுத்திருப்பார்கள். கிளம்பிடலாம் என்கிற மூட் வந்துவிட்டது. 

அந்தப் பாட்டு முடிந்து அரைமணி பல குரல்கள் ஒலித்தன. சலித்துப்போய் அதன் கழுத்தைத் திருகலாம் என்று கையைக் கொண்டு போனபோது “நிப்பாட்டுடா”ன்னு பொடரியில் தட்டுவது போல“கேளடி என் பாவையே... “ ஆரம்பித்தது. திரையில் குறும்பென்று சங்கடங்கள் செய்யும் கார்த்திக்குக்கு பின்னணியில் குறும்பாகப் பாடி எஸ்பிபி உயிர் கொடுத்துக்கொண்டிருந்தார். “ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்...”மில் என்ன ஒரு கம்பீரம்! ”ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்”மில் என்ன ஒரு நளினம்!! “என் சொர்க்கமே.. என் சொந்தமே...”யில் குரலை வளைத்து வளைத்து ஜாலம் காட்டினார்.

மூஞ்சி கைகால் அலம்பும் போது, சாப்பிடும் போது, தண்ணீர் குடிக்கும் போது என்று ரகசியக் காதலி போல எஸ்பிபி ஞாபகம். பெண்குரலில் பிரபலமாக இருந்தாலும் சிகரத்தில் இது சிகரம். https://www.youtube.com/watch?v=rNIEALvcBQY இதை விட சிகரம் இது https://www.youtube.com/watch?v=sF_cUbV5Bwg

இரவெல்லாம் மழைக் கொட்டித் தீர்க்கும் போது மொட்டை மாடி ஓரக் கொட்டகையில் வரிசையாய் இதுபோல எஸ்பிபி பாட கவுந்தடித்துப் படுத்துக்கொண்டு மழையையே பார்த்துக்கொண்டு.. பருகாமலே ருசியேருதே.........

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails